நெல்லை: விதிகளை பின்பற்றாத 74 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்ற
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை கடைபிடிக்காத 74 வர்த்தக நிறுவனங்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்றைய தினம் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று தினத்தில் விடுப்போ அளிக்க வேண்டும். அவ்வாறு பணிபுரியும் சிப்பந்திகளிடம் விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நமூனாவில் கையெழுத்து பெற வேண்டும்.
புதன்கிழமை இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, மேலப்பாளையம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், வள்ளியூர் பகுதியில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜெ. காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் இம்மாவட்டத்தில் 40 கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஒரு பீடி நிறுவனம், 25 உணவு நிறுவனங்கள், 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய 74 நிறுவனங்களில் மேற்கண்ட விதிகள் பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நிறுவனங்கள் மீது முரண்பாட்டிற்காக சட்ட விதிகளின் கீழ் இசைந்து தீர்வு காணும் அறிவிப்பு வழங்கி ரூ. 24,600 அபராதம் விதிக்கப்பட்டது.