முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் நடத்தை விதி மீறல்: திமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

ஏற்காடு தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் திமுக சார்பில் வெ

Updated On : 25 அக்டோபர், 2013 at 9:05 PM
பகிர்:

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக வேட்பாளர் மாறன் மீது வாழப்பாடி போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்காடு தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் திமுக சார்பில் வெ.மாறனும், அதிமுக சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. எஸ்.பெருமாளின் மனைவி சரோஜாவும் போட்டியிடுகின்றனர்.இந்த நிலையில் திமுக வேட்பாளர் மாறன் வியாழக்கிழமை (அக்டோபர் 24) தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சித் தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்தது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள திமுகவின் முக்கியப் பிரமுகர்களை மாறன் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இதற்கிடையே திமுக வேட்பாளர் மாறன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 22-ம் தேதி மாறன் தனது ஆதரவாளர்களுடன் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழப்பாடியைத் தாண்டிச் சென்றதாக வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் அய்யனார், ராஜேஸ்வரன் ஆகியோர் வாழப்பாடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.வேட்பாளர் மாறன் தனது ஆதரவாளர்களுடன் 10-க்கும் மேற்பட்ட கார்களில் சென்றதை தாங்கள் கண்டதாக அவர்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார், திமுக வேட்பாளர் மாறன் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கூறும்போது, கடந்த 22-ம் தேதி திமுக வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வி.ஏ.ஓ.க்கள் புகார் அளித்துள்ளனர். சம்பவம் நடைபெற்றபோதே இது குறித்து புகார் தெரிவித்திருந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்திருக்க முடியும். மேலும் வேட்பாளருடன் சென்ற கார்களின் விவரம், அதில் இருந்தவர்களின் விவரங்களை வி.ஏ.ஓ.க்கள் அளிக்கவில்லை.வாழப்பாடி - ஆத்தூர் வழித் தடத்தில் உள்ள காவல்துறையின் கண்காணிப்பு கேமிராக்களில் வேட்பாளர் விதிகளை மீறி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தால் அவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே திமுக வேட்பாளர் மீது போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.