முகப்பு
தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழலைக் காக்க நகராட்சிப் பள்ளி ஆசிரியை புதிய முயற்சி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சிறப்பான முறையில் தொடர்ந்து நிறைவேற்றியதற்காக, பல்வேறு விருதுகளை தருமபுரி நகராட்சிப் பள்ளி ஆசிரியை எம். தனலட்சுமி பெற்றுள்ளார்.

Updated On : 21 செப்டம்பர், 2013 at 11:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 7:16 PM

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சிறப்பான முறையில் தொடர்ந்து நிறைவேற்றியதற்காக, பல்வேறு விருதுகளை தருமபுரி நகராட்சிப் பள்ளி ஆசிரியை எம். தனலட்சுமி பெற்றுள்ளார். மேலும், அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 2002-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தருமபுரி நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை எம்.தனலட்சுமி இருந்து வருகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி: பள்ளி, பொது இடங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொதுமக்களிடம் அதுகுறித்து எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது போன்ற பணிகளை தேசிய பசுமைப் படை செய்து வருகிறது.

Advertisement

2011ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு, தருமபுரி பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த பயணிகளிடம் அதைப் பெற்றுக் கொண்டு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

சேவை விருது: இதுபோன்ற சிறப்பான சேவையைப் பாராட்டி கடந்த 2010ஆம் ஆண்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த சேவைக்கான விருதும், ரோட்டரி சங்கம் சார்பில் விருதும் ஆசிரியை தனலட்சுமிக்கு அளிக்கப்பட்டது.

நிகழாண்டில் இந்தப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகாவுக்கு சிறந்த மாணவிக்கான விருது கிடைத்துள்ளது.

இதற்கிடையே, சிறப்பாகச் செயல்பட்டு வரும் தருமபுரி நகராட்சிப் பள்ளியில் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் அமைக்க மாவட்ட தேசிய பசுமைப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மையம் அமைக்கப்பட்டதும், இணையதளம் மூலம் மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக, மாவட்டத்தில் உள்ள 150 அரசு, தனியார் பள்ளிகளில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

மண்புழு உரம் தயாரிப்பிலும் மும்முரம்: தருமபுரி நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2010-11-ஆம் கல்வியாண்டு முதல் தேசிய பசுமைப் படை மூலம் மாணவிகளால் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, அங்குள்ள மரங்கள், செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மண்புழு உரம் தயாரிப்பது குறித்து மாணவிகளுக்கு கற்றுத் தரப்பட்டதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி, பல இடங்களில் தற்போது சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆசிரியை தனலட்சுமி கூறியது:

செயற்கை உரம் பயன்படுத்துவதை ஒழித்து, எளிய முறையில் மண்புழு உரம் தயாரிக்கலாம் என்பதை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் பள்ளியில் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம், மாணவிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல, மாசு இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் தேசிய பசுமைப் படை பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.