சென்னையில் டிச.21,22 தேதிகளில் மாநில மாநாடு: அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2-வது மாநில மாநாட்டை டிச.21,22 தேதிகளில் நடத்துவது என தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2-வது மாநில மாநாட்டை டிச.21,22 தேதிகளில் நடத்துவது என தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் (அண்ணாமலைப் பல்கலை) தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கு.ராஜேந்திரன் (பாரதிதாசன் பல்கலை), பொருளாளர் ஆர்.சிவக்குமார் (பாரதியார் பல்கலை), துணைத் தலைவர்கள் எம்.எக்வின்ரெனி, சி.எம்.எபிநேசர், வெ.செல்வராஜ், எஸ்.பாண்டியன், எஸ்.புத்தன், ஜி.மாணிக்கவாசகம், மாநில செயலாளர்கள் என்.அரசு, ஜி.அன்பழகன், க.ஆறுமுகம், எஸ்.ஜி.குணசேகரன், பி.தாமோதகன், எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 80 பேர் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் அனுமதி பெற்று கூட்டமைப்பு 2வது மாநில மாநாட்டை வருகிற டிச.21,22 தேதிகளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடத்துவதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அனுமதியளித்துள்ளார். 2-வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு ஆட்சிமன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
1996-க்கு பிறகு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பிளாக் கிராண்ட் நிதி உயர்த்தி வழங்கப்படாததால் பல்கலைக்கழகங்கள் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே 196-க்கும் பிறகு 2013 வரை பல்கலைக்கழக வளர்ச்சி, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை கணக்கிட்டு நிதியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வுபெறும் வயது 60-ஆக உயர்த்த வேண்டும் என கோருகிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எவ்வித பாதிப்பின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பதவிஉயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்திருத்தம் குறித்த தீர்மானம் குடியரசுத் தலைவரிடம் கையெழுத்தான பிறகு நிலைமை சீராகும் என நம்புகிறோம் என சி.மதியழகன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.