முகப்பு
தற்போதைய செய்திகள்

அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம்

அதிமுக சார்பில் வந்தவாசியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் கடுமையாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராமத்தில் வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

அதிமுக சார்பில் வந்தவாசியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் கடுமையாக விமர்சித்து பேசினராம். இதற்கு அங்கிருந்த பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் பாமகவினரை அப்புறப்படுத்தினராம். இது தொடர்பாக அதிமுக நகரச் செயலர் பாஷா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வந்தவாசி தெற்கு போலீஸார் பாமகவைச் சேர்ந்த வாட்டர்  மணி, லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் வந்தவாசி பகுதியில் அடுத்தடுத்து நடந்த அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் கடுமையாக விமர்சித்து வந்தாராம். இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் வந்தவாசியில் அண்மையில் நடந்த வீரவணக்கநாள் கூட்டத்தில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனை பாமகவினர் கடுமையாக விமர்சித்து பேசினராம்.

இதை தொடர்ந்து பாமகவினர் அதிகம் வசிக்கும் வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடக்க இருப்பதாகவும், இதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் செம்பூர் கிராமத்துக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராமத்தினர் ஞாயிற்றுக்கிழமை வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றில் கருப்பு கொடி கட்டியிருந்தனர். இதையடுத்து அக்கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அவசர பணியாக சென்னை செல்வதால் விழா ரத்து செய்யப்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →