சிதம்பரத்தில் மாணவர் உடலை பெற மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் ஒரு வீட்டின் மாடியில் வசிப்பவர் கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர
சிதம்பரத்தில் கொலை செய்யப்பட்ட 11-ம் வகுப்பு மாணவரின் உடலை பெற மறுத்து அரசு மருத்துவமனை முன்பு அவரது தாயார், சகோதரி மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் ஒரு வீட்டின் மாடியில் வசிப்பவர் கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சூரியபிரகாஷ் சைக்கிளில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வீட்டு முன்பு சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அம்மாணவரை காணவில்லை. மாணவரை தேடி பார்த்த அவரது பெற்றோர், செல்போனில் சூரியபிரகாஷை தொடர்பு கொண்டனர். அப்போது வேறு நபர் செல்போனை எடு்த்து ரூ.25 லட்சம் பணம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனக்கூறி துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை மாணவர் சூரியபிரகாஷ் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். ரத்த வாடை அடித்ததாலும், ரத்தம் கடையிலிருந்து வெளியேறியதால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கடையை திறந்து பார்த்து போது இச்சம்பவம் தெரியவந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மாணவர் சூரியபிரகாஷ் வசிக்கும் கீழ்வீட்டில் குடியிருக்கும், கடை உரிமையாளரான ஜவகர்பாபு (32), அவரது மனைவி ஆரவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்விரோதம் காரணமாக மாணவர் சூரியபிரகாஷை, கீழ்வீட்டில் வசிக்கும் ஜவகர்பாபு கொலை செய்து, தனது கடைக்கு சாக்குமூட்டையில் வைத்து பூட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மாணவர் கொலை வழக்கில் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை பிரதே பரிசோதனை செய்யப்பட்ட உடலை பெற மறுத்து அவரது தாயார், சகோதரி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக தெரிவித்ததை அடுத்து மறியலை வாபஸ் பெற்று உடலை பெற்றுச்சென்றனர்.