தலித் மக்கள் மீது தாக்குதல் 50 பேர் மீது வழக்குப் பதிவு: போலீஸார் குவிப்பு
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து அண்ணாமலைநகர் போலீஸார் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் 6 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வடக்குமாங்குடியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கலவரம் ஏற்படாமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா வியாழக்கிழமை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல்: தாக்குதலில் காயமுற்ற 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை கான வந்த வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த தலித் சமுதாய மக்கள் 100 பேர் தாக்குதல் தொடர்பானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சென்று அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குமார் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளது, விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தை அடுத்து மறியலை வாபஸ் பெற்றனர்.