சப்-இன்ஸ்பெக்டர் கொலை: கைதான காதலி வனிதாவிற்கு காவல் நீட்டிப்பு
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா. கணேசன் கடந்த ஜூலை 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள ஸ்ரீசக்கரா அவென்யூ பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசனுடன் தகாத உறவு வைத்திருந்த சிதம்பரம் அருகே உள்ள அம்பலத்தாடிகுப்பத்தைச் சேர்ந்த கலைமணி என்பவரின் மனைவி வனிதா (25) என்ற பெண் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வற்புறுத்தியதன் பேரில் வனிதா, தனது கணவன் கலைமணியிடமிருந்து விவாகரத்து பெற்றதாககவும், இந்நிலையில் கணேசன் தன்னை விட்டு, விட்டு வேறொரு ஒரு பெண்ணை கடந்த ஜூலை 9-ம் தேதி திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் வனிதா, கணேசனை திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வனிதா கடந்த ஜூலை 23-ம் தேதி புதன்கிழமை இரவு சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாள் காவல் முடிவுற்று வனிதா புதன்கிழமை மீண்டும் சிதம்பரம் நம்பர்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை மேலும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் அவரை கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்று சிறையிலடைத்தனர்.