விலையில்லா மடிக்கணினி கோரி மாணவர்கள் சாலை மறியல்
பழனியில் விலையில்லா மடிக்கணினி கோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் விலையில்லா மடிக்கணினி கோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சுதந்திர தினம் துவங்கி மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பழனி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள நிலையில் பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு மடிக்கணினிகள் வரப்பெற்றும் இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென பழனி-திண்டுக்கல் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த டவுன் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்ததாவது, பழனி கல்விமாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிலையில் நகராட்சி பள்ளி நிர்வாகம் பொருட்கள் வந்தும் அவற்றை வழங்க தாமதம் செய்து வருகிறது. வழங்குவதற்கான முயற்சிகளை எடுக்க மறுக்கிறது. கேட்டால் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையிலேயே மடிக்கணினி வழங்கப்படும். அதற்காக தேதி கோரியுள்ளோம் என ஆசிரியர்கள் தெரிவிப்பதாக என தெரிவித்தனர்.
தலைமையாசிரியர்(பொறுப்பு) ரங்கநாதன் கூறுகையில், மாணவர்களுக்கான மடிக்கணினி வந்துவிட்டது உண்மையே. ஆனால் இறுதியாண்டு படிப்பு முடித்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களுடைய விபரங்களை சேகரித்து வருகிறோம். சில மாணவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு பிற மாணவர்களுக்கு வழங்கினால் பாரபட்சமாக தெரியும், ஆகவே, அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து சில நாட்களில் வழங்கி விடுவோம் என கூறியும் சில மாணவர்கள் தூண்டுதலின் பேரில் வேண்டுமென்றே மறியலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.