பழனி அருகே மின்னல் தாக்கி 22 ஆடுகள் பலி
பழனி அருகே தனியார் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் மின்னல் தாக்கி 22 ஆடுகள் இறந்து போயின.
பழனி அருகே தனியார் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் மின்னல் தாக்கி 22 ஆடுகள் இறந்து போயின.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தைவழியான்(45). இவர் ஊர், ஊராக உறவினர்களுடன் சென்று விளைநிலங்களுக்கு உரத்துக்காக ஆட்டுப்பட்டி போடும் தொழில் செய்து வருகிறார். இதற்காக வெள்ளாடு, செம்மறியாடு, மயிலம்பாடி வகைகள் கலந்து சுமார் 200 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் தனியார் தோட்டங்களில் ஆட்டுப்பட்டி போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வக்கீல் ஜீவா என்பவர் தோட்டத்தில் ஆட்டுப்பட்டி போட்டுள்ளார். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்லமழை பெய்து வந்தது. செவ்வாய்க்கிழமை இரவு மழையானது இடி,மின்னலுடன் பெய்துள்ளது.
அப்போது சந்தைவழியானின் ஆட்டுப்பட்டியில் மின்னல் தாக்கியதில் 22 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. ஆடுகள் சத்தத்தை கேட்டு பட்டிக்கு போன சந்தைவழியான் சம்பவம் அறிந்து அதிர்ச்சிக்கு ஆளானார். ஆடுகள் பலியான விபரம் குறித்து கணக்கன்பட்டி கால்நடை மருத்துவ அலுவலர் மருதுபாண்டி குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பலியான ஆடுகளின் மதிப்பு சுமார் ஒன்றரை இலட்சம் என்றும், தமது இழப்புக்கு தமிழக அரசு மனது வைத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நிதிஉதவி வழங்கினால் மட்டுமே இழப்பை சரிக்கட்ட முடியும் என்றும் பட்டி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.