பால் வாங்க வந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சாட்சி சொன்னவரின் வீட்டுக்கு தீவைப்பு
புதுச்சேரி அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் பாலியல் பலாத்கார வழக்கின் சாட்சி வீட்டுக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
புதுச்சேரி அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் பாலியல் பலாத்கார வழக்கின் சாட்சி வீட்டுக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவைச் சேர்ந்த பெருமாள். இவர் புதுவை அரசு நிறுவனமான பாசிக்கில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21.7.2014 அன்று பெருமாளின் 10 வயது மகள் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மளிகைக் கடையில் பால் வாங்குவதற்காக சென்றார்.
அப்போது கடை உரிமையாளர் ஆறுமுகம் அச்சிறுமியிடம் பால் பாக்கெட் வேறொரு இடத்தில் இருக்கிறது. அங்கு சென்று எடுத்துவரலாம் எனக்கூறி அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பெருமாள் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்.ஐ. மோகன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மளிகைக் கடை அதிபர் ஆறுமுகத்தை கைது செய்தார்.
சாட்சி வீட்டுக்கு தீவைப்பு
இதற்கிடையே பெருமாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நமச்சிவாயம் மனைவி வள்ளி, சிறுமிக்கு ஆதரவாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.மேலும் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாகவும் உள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர்கள் வள்ளியின் வீட்டுக்கு தீவைத்து விட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வள்ளி காட்டேரிகுப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பெருமாள் மகள் பாலியல் பலாத்கார வழக்கில் நான் அவர்களுக்கு ஆதரவாக காவல் நிலையம் சென்றேன். மேலும் சாட்சியாகவும் உள்ளேன்.
இந்நிலையில் எதிரி ஆறுமுகம் தரப்பினர் என்னை சாட்சியாக செல்லக்கூடாது என வற்புறுத்தினர். ஆனால் அதை மீறி சாட்சியாகச் சென்றதால் எனது வீட்டுக்கு தீவைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.