தூத்துக்குடி அருகே டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாவு
தூத்துக்குடி அருகேயுள்ள உமரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (57). இவர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில்,
தூத்துக்குடி அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலக ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள உமரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (57). இவர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை தனது மோட்டார் சைக்கிளில் செந்தில் ஆறுமுகம் தனது மனைவியின் தங்கை சண்முககனியை (40) புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு உமரிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து பிரதான சாலையில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தண்ணீர் டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செந்தில் ஆறுமுகமும், சண்முகக்கனியும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கோட்டை போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.