ஆழ்கடலில் மீன்பிடித்த குமரி மீனவர்கள் சிறைபிடிப்பு
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் உள்பட 10 மீனவர்கள் பிரிட்டன் நாட்டு கப்பலில் வந்தவர்களால் சிறைபிடிக்கப்பட்டு
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் உள்பட 10 மீனவர்கள் பிரிட்டன் நாட்டு கப்பலில் வந்தவர்களால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டுக்கு சொந்தமான தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானதையடுத்து, மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேசையன் மகன் டைட்டஸ் (48). இவருக்குச் சொந்தமான போசின் என்ற விசைப் படகில் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அற்புதம் மகன் தர்மையன் (56), அம்புரோஸ் மகன் ஜெரோன் (55), செபாஸ்டின் மகன் ராஜாமணி (45), சூசை மகன் ஜெயிமன்ஸ் (57), மார்செலின் மகன் டேவி (47), கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த பினு (40) உள்பட 10 மீனவர்கள் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க டிச. 2 ஆம் தேதி சென்றனர். இம் மீனவர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு பிரிட்டன் நாட்டு கப்பலில் வந்தவர்கள் இம் மீனவர்களை கைது செய்து, அங்குள்ள டீரோ கிரேஸியா என்ற தீவுக்கு கொண்டு சென்றுள்ளனராம்.
ஏற்கனவே டிச. 3 ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சின்னத்துறை மீனவர் டைட்டோ என்பவருக்குச் சொந்தமான கிரீஸ்மா என்ற விசைப்படகில் சென்ற 14 மீனவர்களை சிறைபிடிக்கப்பட்டு இத் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். அம் மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேச செவ்வாய்க்கிழமை வாய்ப்பளிக்கப்பட்டதையடுத்து, தூத்தூர் மீனவர்கள் உள்பட 10 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டு இத் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களிடம் மீனவர்கள் தெரிவித்தனராம். இது குறித்து தூத்தூர் மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அம் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisement
இதைத் தொடர்ந்து இத் தகவலை மீனவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜெஸ்டின் ஆன்டணியிடம் தெரிவித்தனர். அவர் மத்திய, மாநில அரசுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து, பிரிட்டன் நாட்டு தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.