பழனியருகே சண்முகநதி கரையில் சிதிலமான நிலையில் ஆறுதலை முருகர் சிலை
பழனியில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் சண்முகநதி ஆற்றின் கரையில் உள்ளது கொங்கூர் கிராமம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை அடக்கிய இந்த
பழனியருகே சண்முகநதி ஆற்றின் கரையில் சிதிலமான நிலையில் ஆறுதலை முருகரின் சிலை கண்டறியப்பட்டுள்ளது.
பழனியில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் சண்முகநதி ஆற்றின் கரையில் உள்ளது கொங்கூர் கிராமம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றை அடக்கிய இந்த கிராமத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளது. வைணவப் பெருந்தகை இராமானுஜர் இங்கு வந்து தங்கி சென்றதாக கொங்குமண்டல சதகம் என்ற நூலின் வாயிலாக தெரியவருகிறது. இங்கு சண்முகநதி ஆற்றின் கரையில் கலைநயமிக்க முருகர் சிலை ஒன்று சேதமடைந்து கேட்பாரற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர் ரவிக்குமார், வானவராயர் பவுண்டேஷன் ஜெகதீசன், சதாசிவம் ஆகியோர் தெரிவித்ததாவது, சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்ட அருள்மிகு முருகரின் சிலை ஆறு தலைகளுடன் உள்ளது. முன்பகுதியில் ஐந்து தலைகளும், பின்புறம் ஒரு தலையும் என மயில்வாகனத்தில் அமர்ந்த நிலையில் கலைநயத்துடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஒரு கால் மடித்தும், ஒருகாலை தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் 12 கைகளுடன் உள்ள சிலையில் இரு கைகள் சேதமடைந்துள்ளது. கைகளில் பல்வேறு தற்காப்பு ஆயுதங்களை வைத்துள்ளார். அருகேயே நந்தி சிலை ஒன்றும் உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது இங்கு சிவன்கோயில் இருந்திருக்கலாம். கொங்கூரில் சைவம், வைணவம் இரண்டும் செழிப்பாக இருந்திருக்கலாம். சிலை அமைவு 12ம் நூற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது என்றும் இந்த சிலையை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.