கொலையுண்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் 2-ம் நாளாக போராட்டம்: போராட்டம் தொடரும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை 2-ம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அறந்தாங்கி சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வக்குமார் (29). இவர் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் தெய்வக்குமார் பிப்.10-ம் தேதி இரவு சோழத்தரம் அருகே பெரியகுப்பத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் காலை வீடு திரும்பவில்லை. செவ்வாய்க்கிழமை காலை தெய்வக்குமார் மர்மநபர்களால் தாக்கப்பட்டு சோழத்தரம் கோவிந்தநல்லூர் கைகாட்டி பூங்கா அருகே காது அறுபட்டு நிலையில், தலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளிகளை உடன் கைது செய்ய வலியுறுத்தி, உடலை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்த மறியலை வாபஸ் பெற்றனர்.
பின்னர் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் போலீஸார் சந்தேகமரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளதால், கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உடலை பெறாமல் முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மேலும் புதன்கிழமை 2-ம் நாளாக அரசு மருத்துவமனை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை பெறாமல் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்த பின்னர் மறியலை கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர். பின்னர் திருமாவளவன் ஆயுதப்படை காவலரின் குடும்பத்தினரிடம் நடந்த விபரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஒரு போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெறமாட்டோம். போராட்டம் தொடரும். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே வியாழக்கிழமை காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.