அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா:பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கமலவல்லி தாயார் சமேத அருள்மிகு இராஜகோபாலசாமி கோவிலில் புதன்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கமலவல்லி தாயார் சமேத அருள்மிகு இராஜகோபாலசாமி கோவிலில் புதன்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அருள்மிகு இராஜகோபாலசாமி கோவிலில் ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். மிகவும் பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும்,அமாவாசை நாள்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு பால்,தயிர்,இளநீர்,சந்தனம்,பஞ்சாமிர்தம்,மஞ்சள் பொடி,திரவிய பொடி ஆகியவற்றைக்கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.தொடர்ந்து வடை,துளசி,வெற்றிலை,பழம்,பூ மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மாலையில் ஸ்ரீ தசபுஜ வீர ஆஞ்சநேயர் வீதியுலா நடைப்பெற்றது.
Advertisement
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே நீண்ட தூரம் வரை வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர்.அமாவாசை உற்சவ வழிபாட்டிற்காக செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதகிழமை இரவு 10 மணி வரை கோயில் நடை தொடர்ந்து திறக்கப்பட்டிருந்தது. ஆங்கில புத்தாண்டு நாளும் அனுமன் ஜெயந்தியும் ஒரே நாளில் வந்ததால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. கோயில் செயல் அலுவலர் தி.சிவக்குமார்,ஆய்வர் ரு.சுதா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.