முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்ளாட்சிப் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் வெ. துளசிராமன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004 ம் ஆண்டுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணி செய்யும் பணியாளர்களை அரசு அலுவலர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் வெ. துளசிராமன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004 ம் ஆண்டுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியாளர்களுக்கான மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து தலைமை செயலர் தலைமையில் கூட்டு மன்றக் கூட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் பணி செய்யும் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் 6 வது ஊதியக்குழு, ஒரு நபர் குழு, ஊதிய சீரமைப்புக்குழுக்களால் புறக்கணிக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள், களப்பணியாளர்கள், சார்நிலை பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால், அளிக்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமன நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். மேலும் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனையின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும்.

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் ஆணை எண் 144 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், நிரந்தர ஓய்வூதியம் ஆகியன வழங்கப்பட வேண்டும்.பல்வேறு துறைகளில் பணி புரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை 338 ஐ அரசு அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய தினக்கூலி, பகுதி நேர பணியாளர்களாக பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணி செய்யும் பணியாளர்களை அரசு அலுவலர்களாக கருதி உத்தரவிட வேண்டு்ம்.

சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறை செய்து, அக்காலத்திற்கான கூட்டுறவு சங்கக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 2 ஆண்டுகளாக அடையாள அட்டை கிடைக்காத நிலை உள்ளது. ஆகவே அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலர் சு. அருணாசலம், பொருளாளர் நக்கீரன், இணைச் செயலர்கள் ஆறுமுகபாண்டி, பால்பாண்டி, துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம், சண்முகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →