சிதம்பரம் மருத்துவக்கல்லூரி ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி புதன்கிழமை பணிகளை புறக்கணித்து
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி புதன்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களாக 150 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் ஊழியர்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் ஊழியர்கள் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், சென்னை ராயல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர்களின் ஒப்பந்தக்காரர் தினேஷ் ஆகியோர் சென்று சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஊதியம் 2500 லிருந்து 2900 மாக உயர்த்துவது என்றும், மாதத்திற்கு இருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, 26 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.