திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா: ஜன. 7 ம் தேதி கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை கோமதிஅம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 7 ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜன.
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை கோமதிஅம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 7 ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜன. 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரம் வட்டம், வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரில் தாமிரவருணி நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா ஜன. 7 ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் கோயிலில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும்.
திருவிழாவின் 9 ம் நாளான ஜன. 16 ம் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. 17 ம் தேதி காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். இதையடுத்து சுவாமி அம்பாள் தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.திரளான பக்தர்கள் பங்கேற்று தாமிரவருணி ஆற்றில் நீராடி தரிசனம் செய்வர்.
இதில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சு. ரத்னவேல்பாண்டியன், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர். சுப்பையா, எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி., ஆட்சியர் மு. கருணாகரன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ம. அன்புமணி, மதுரை தனியார் ஆலை நிர்வாகஇயக்குநர் கருமுத்து தி. கண்ணன், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நிர்வாகஇயக்குநர் கே. ராமசாமி, ஊராட்சித் தலைவர் ப. முத்துஐயப்பன், அ. முத்தையாபாண்டியன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
மாலையில் அபிஷேக ஆராதனை, இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பக்தர்கள் வசதிக்காக வீரவநல்லூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 18 ம் தேதி (சனிக்கிழமை) மதியம் சாஸ்தாப்ரீதி, மாலை சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா, பைரவர் சிறப்பு பூஜை ஆகியன நடைபெறுகிறது.