தனி நபர் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்
திருநெல்வேலி மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக செவ்வாய்க்கிழமை
திருநெல்வேலி மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலக் குழுத் தலைவர்கள் கே. மாதவராமானுஜம், எஸ்.கே. ஹைதர்அலி, அதிகாரிகள் அ. பெருமாள், து. கருப்பசாமி, அனிதா, சாந்தி, சாமுவேல்செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் வண்ணை கணேசன், பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிநீர் தொட்டி ஆக்கிரமிப்பு: மாநகராட்சி சார்பில் 45 வது வார்டு, ஆண்டாள்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறுமின்விசை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, 3 குடிநீர் இணைப்புகளும் வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது தெரு ஓரமாக உள்ள இந்த குடிநீர் தொட்டியை அருகில் வசிப்பவர் ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய வீட்டுக்கு அதில் இருந்து குடிநீரை பயன்படுத்தி வருகிறார்.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், சிபிஐ (எம்.எல்) கட்சியின் கிளைச் செயலர் பி. சுப்பிரமணியன் மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.