ஜெயலலிதாவை பிரதமராக்க பாடுபட வேண்டும்: எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன்
சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் 'வெற்றி' என்ற மூன்று எழுத்தை தந்து ஜெயலலிதாவை பிரதமராக்க பாடுபட வேண்டும் என அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 'வெற்றி' என்ற மூன்று எழுத்தை தந்து ஜெயலலிதாவை பிரதமராக்க பாடுபட வேண்டும் என அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே புவனகிரியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயபாலன் எழுதிய 'இயற்கையும் தகவலும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மு.வள்ளுவன் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தமிழத்துறை முன்னாள் தலைவர் அண்ணாதுரை, புவனகிரி பேரூராட்சி தலைவர் வள்ளி சச்சிதானந்தம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை திருமுல்லைவாயல் வீரமணி வரவேற்றார். விஜயன் நூல் அறிமுகவுரையாற்றினார்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் நூலை வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன் பெற்றுக் கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகமாறன் (காட்டுமன்னார்கோயில்), பேராசிரியர் பாபு ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முனைவர் கோ.தங்கையன் மதிப்புரையாற்றினார்.
விழாவில் வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் பேசியது: தமிழ் என்ற மூன்று எழுத்துக்கு, மூச்சு என்ற மூன்றெழுத்து மூலம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் 'இறைவா' என்ற மூன்று எழுத்து அடங்கியிருக்கிறது. சிவன், இயேசு, அல்லா ஆகியவற்றை மூன்றெழுத்தாக கருதுகிறோம். தமிழ் என்ற மூன்று எழுத்து மூலம் திராவிட பேரியக்கத்தை காப்பாற்றியது ஈ.வே.ரா என்ற மூன்றெழுத்து. அவரை தந்தை என்றழைத்த அண்ணா மூன்றெழுத்து, எம்ஜிஆர் மூன்றெழுத்து, எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு கட்சிக் கொடியையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்த 'அம்மா' என்ற மூன்றெழுத்து என ஏ.தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். நூலாசிரியர் ஜெயபாலன் ஏற்புரையாற்றினார். விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.