வீட்டின் பூட்டை உடைத்து 60பவுன் நகை, பணம் கொள்ளை
பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி கண்ணகி ரோட்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்துச்சாமி(40). இவரது மனைவி ரெங்கநாயகி(34). முத்துச்சாமி கேரள மாநிலம் நெடுங்கண்டத்தில் அரசு கால்நடை
பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 60பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி கண்ணகி ரோட்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்துச்சாமி(40). இவரது மனைவி ரெங்கநாயகி(34). முத்துச்சாமி கேரள மாநிலம் நெடுங்கண்டத்தில் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தைப்பொங்கல் திருவிழாவிற்காக பழனி வந்த இவர் வியாழக்கிழமை மனைவி ஊரான உடுமலைப்பேட்டை சென்றுள்ளார். சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்புறக்கதவு, பீரோ, அலமாரி அனைத்தும் கடப்பாரை கொண்டு உடைத்து திறக்கப்பட்டு அலமாரியில் இருந்த சுமார் 60பவுன் மதிக்கத்தக்க மோதிரம், செயின், தோடு போன்றவையும், ரொக்கம் ரூ.9 ஆயிரமும் திருடு போனது தெரியவந்தது. திருட்டு போன வீடு உள்ள இடம் அமைதியான ஜனநடமாட்டம் குறைந்த பகுதியாகும்.
தற்போது தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால் பழனிக்கு வரும் வாகனங்கள் இந்த வீட்டின் முன்புறம் உள்ள சாலை வழியாக செல்ல நேரிட்டது. இது திருடர்களுக்கு வாய்ப்பாக அமைந்ததால் வீட்டில் பொருட்களை உடைத்து திறக்கும் போது யாருக்கும் சத்தம் கேட்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முத்துச்சாமி பழனி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து டிஎஸ்பி., சண்முகசுந்தரம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் பதிவு செய்தனர்.