ஆயுதப்படை காவலர் தற்கொலை: உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவல் தற்கொலை குறித்து விசாரணை நடத்த கோரி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை பிற்பகல் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால்
சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவல் தற்கொலை குறித்து விசாரணை நடத்த கோரி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை பிற்பகல் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்- சேத்தியாத்தோப்பு போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லலிதாம்பாள்நகரில் வசிப்பவர் ஜெயராஜ் (31). ஆயுதப்படை காவலரான இவருக்கு சுகந்தி என்ற மனையும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஜெயராஜ் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மறைந்த காவலர் ஜெயராஜ் சொந்தஊரில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயராஜ் தற்கொலைக்கு உயரதிகாரிகள் திட்டியதுதான் காரணம். எனவே தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவரது மனைவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இறந்த காவலர் உடலுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி கீரப்பாளையம்- சேத்தியாத்தோப்பு சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் சாலைப் போக்குவரத்தை சிதம்பரம் சி.முட்லூர் புறவழிச்சாலை, புவனகிரி வழியாக சேத்தியாத்தோப்பிற்கு மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு மற்றும் ஒரத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய முடியாது என தெரிவித்ததை அடுத்த சாலைமறியலை வாபஸ் பெற்றனர். சாலைமறியலினால் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.