பீடித்தொழிலாளர்கள் பிப்.17-ல் நாடு தழுவிய போராட்டம்: ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டில் அறிவிப்பு
பிப்ரவரி 17-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த, திருநெல்வேலியில் நடைபெற்ற அகில இந்திய பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் (ஏ.ஐ.டி.யூ.சி.) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த, திருநெல்வேலியில் நடைபெற்ற அகில இந்திய பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் (ஏ.ஐ.டி.யூ.சி.) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மேளனத்தில் 11-வது தேசிய மாநாடு திருநெல்வேலியில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், அஸ்ஸாம், பிகார், குஜராத், ஜார்க்கன்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்குவங்கம், சத்தீஸ்கர், தமிழகம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
இம் மாநாட்டின் நிறைவையொட்டி, ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய செயலர் அமர்ஜித் கௌர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றன. சிறு-குறு தொழில்கள் நலிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. மத்திய திட்டக்குழுவினர் வறுமைக்கோடு வரையறைக்கு வைத்துள்ள ஊதியத்தொகை போதுமானது இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் 1 கோடி பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். பீடிஇலைப்பறிப்பு தொழிலில் 40 லட்சம்பேரும், விற்பனை உள்ளிட்ட இதர பணிகளில் 60 லட்சம் பேரும் என மொத்தம் 2 கோடி பேர் பீடித்தொழிலை நம்பி உள்ளனர். பீடித்தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியமாக ஒரே தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதியின் கீழ் பீடித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்கது. இருப்பினும் எங்களது கோரிக்கையின்படி மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பீடித்தொழிலாளர்களுக்கான மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு, காலதாமத சிகிச்சை என பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு தடுக்க வேண்டும். பீடித்தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் உள்ள சட்டங்களில் இப்போதைய தேவைக்கு ஏற்ப தகுந்த திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். பீடித்தொழிலாளர்களில் ஒப்பந்த முறையை போக்க வேண்டும்.
பீடித்தொழிலாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 17-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகா அளவிலும் பீடித்தொழிலாளர்களைத் திரட்டி இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
இந்த மாநாட்டில் சி.ஐ.டி.யூ. சார்பில் சம்மேளன மாநிலச் செயலர் ஆர்.மோகன், டி.சங்கரபாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய செயலர் வகிதா நிஜாம், மாநிலப் பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. பீடித்தொழிலாளர் சம்மேளன துணைப் பொதுச்செயலர் காசிவிஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நெல்லை மாவட்டத் தலைவர் ஆர்.ஆறுமுகம், பொருளாளர் எம்.எஸ்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.சடையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.