முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு விழாவில் கருணாநிதியைப் பாராட்டும் பாடல்: மாவட்ட ஆட்சியர் வெளிநடப்பு

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டும் பாடல் இடம்பெற்றதால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டும் பாடல் இடம்பெற்றதால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வியாழக்கிழமை மாலை மனிதநேய வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் அ.ஞானசேகரன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மேடைக்கு எதிரே அமர்ந்து கலை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லூரி மாணவிகளின் நடனம் ஒன்று இடம் பெற்றது. இதில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர் அண்ணா, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தந்தவர் எம்ஜிஆர், தமிழை வளர்த்த கலைஞர் நாட்டின் கண்கள் என்ற பாடலுக்கு மாணவிகள் நடனமாடினர்.

இப் பாடலில் தமிழை வளர்த்த கலைஞர் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டும் வரிகள் இடம் பெற்றுள்ளதையறிந்த ஆட்சியர் அ.ஞானசேகரன் அதிர்ச்சியடைந்தார். உடனே, அரசு அதிகாரிகளை அழைத்து அதிமுக ஆட்சியில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பாராட்டும் பாடலுக்கு நடனம் ஏற்பாடு செய்தவர் யார்? என்று கேட்டார்.

அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த ஆட்சியர், விழாவில் இருந்து வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையே, இப் பாடல் இடம்பெற யார் காரணம்? என்பதை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.