தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு புதிய பள்ளி: கோபால சமுத்திரத்தில் மக்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயில புதிய பள்ளிக் கூடம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயில புதிய பள்ளிக் கூடம் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபாலசமுத்திரத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2013 ம் ஆண்டு நவ. 1 ம் தேதி கோபாலசமுத்திரம் தெற்கு ஊர் முப்புடாதி அம்மன் கோவில் தெற்குத் தெருவை சேர்ந்த லெட்சுமணன் மகன் தர்மராஜ் (25) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் தங்கள் சமுதாய மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்து அங்குள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 129 மாணவர்களை அப்பள்ளிக்கு கல்வி பயில அனுப்ப மறுத்ததை அடுத்து, அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் தனியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பயிலும் வகையில் தனியாக பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும். அல்லது கோபாலசமுத்திரத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தெற்கு ஊர் கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முப்புடாதி அம்மன் கோயில் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஊர் தலைவர் உ. வேலாயுதபெருமாள் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றிய செயலர் பி. கற்பகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மனித உரிமை களம் இயக்குநர் மா. பரதன், அண்ணாத்துரை (ஆதிதிராவிட சங்கம்), ப. ராஜ்குமார் (தேவேந்திரகுல வேளாளார் கூட்டமைப்பு), வேலம்மாள் (சமகல்வி இயக்கம்), நடராஜன் (ஜனநாயக வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் தெற்கு ஊர் தங்கம்மன் கோயில் தெரு, கீழத் தெரு, முப்புடாதி அம்மன் கோயில் நடுத் தெரு, தெற்கு தெரு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களை தவிர பிற வகுப்பு மாணவர்கள் 86 பேர் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தையொட்டி, கோபாலசமுத்திரத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக கோரிக்கையை வலியுறுத்தி பிப். 3 ம் தேதி (திங்கள்கிழமை) திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.