முகப்பு
தற்போதைய செய்திகள்

களக்காடு மலையடிவாரத்தில் கூண்டுக்குள் சிக்கிய கரடி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவார கிராமத்தில் சுற்றித் திரிந்த கரடி வனத்துறையினர் அமைத்த கூண்டில் சனிக்கிழமை அதிகாலை சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

களக்காடு மலையடிவாரத்தில் கூண்டுக்குள் சிக்கிய கரடி களக்காடு, ஜூலை. 12: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவார கிராமத்தில் சுற்றித் திரிந்த கரடி வனத்துறையினர் அமைத்த கூண்டில் சனிக்கிழமை அதிகாலை சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள தலையணை அருகே சிவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, தென்னை, மா பயிரிட்டுள்ளனர்.  வனப்பகுதிக்கு மிக அருகேயுள்ள கிராமம் என்பதால் இங்கு யானை, சிறுத்தை, மிளா, கரடி, நரி, மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் நடமாட்டம் காணப்படும். கடந்த 1 வாரத்திற்கு முன்பு (ஜூலை-6) சிவபுரம் குடியிருப்புப் பகுதியில் கரடி ஒன்று உலா வந்ததை குடியிருப்புவாசிகள், விவசாயிகள் பார்த்துள்ளனர்.

இந்த கரடியால் கிராம மக்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்பதால் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரா. பிள்ளைவிநாயகம் தலைமையில் வனச்சரகர் ராமசாமி, வனவர் அப்துல்ரஹ்மான் அடங்கிய வனத்துறையினர் சிவபுரம் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள ஓடையில் திங்கள்கிழமை (ஜூலை-7) கூண்டு அமைத்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்த வழியாக உலவிய கரடி, கூண்டுக்குள் இருந்த பலாப்பழத்தை சாப்பிடுவதற்காக கூண்டுக்குள் நுழைந்து சிக்கிக் கொண்டது. இதையடுத்து, கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனத்துறையினர் 15 கி.மீ தொலைவில் உள்ள செங்கல்தேரியில் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். கரடி பிடிபட்டதால் சிவபுரம் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.