பழனி அருகே தோட்ட கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
பழனியை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மான், காட்டுமாடு, யானை, பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் நிலவி வரும் உணவு,
பழனி அருகே தோட்ட கிணற்றில் விழுந்த புள்ளிமான் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது.
பழனியை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மான், காட்டுமாடு, யானை, பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் நிலவி வரும் உணவு, குடிநீர்த்தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் நிலப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு படையெடுத்து வருகிறது. இதனால் பல விலங்குகள் விளைநிலங்களில் செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
கடந்த சிலமாதம் முன்பு ஆண்டிபட்டி அருகே குடிநீர் தேடி வந்த சிறுத்தைப்புலி கிணற்றில் விழுந்தது. இதை அமராவதி வனத்துறையினர் மீட்டனர். இந்நிலையில் பழனி அருகே வேலாயுதம்பாளையம் புதூரில் காளிமுத்து என்பவர் தோட்ட கிணற்றில் குடிநீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதால் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தீயணைப்புப் படையினர் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். வனத்துறையினரும் ரேஞ்சர் கணேசன் தலைமையில் வந்து சேர்ந்தனர். சுமார் ஐம்பது அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இல்லாமல் சேறும், சகதியுமாக இருந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் கிணற்றில் இறங்கி மானை கயிற்றால் கட்டி கிணற்றுக்கு மேலே கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மான் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் கூறுகையில், மீட்கப்பட்ட புள்ளிமான் சுமார் நான்கு வயதுடைய ஆண்மான் ஆகும். இதன் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். நிலைய வீரர்கள், வனத்துறையினர் உதவியுடன் மானை காயமின்றி உயிருடன் மீட்டுள்ளோம் என்றார். பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் குடிநீர், உணவு இன்றி அடிக்கடி விலங்குகள் தோட்டத்துக்கு வருகிறது. வனத்துறையினர் உடனடியாக வனப்பகுதியில் தொட்டிகள் அமைத்து விலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது அவசியம் என தெரிவித்துள்ளனர்.