பழனியில் ஆடிக்கிருத்திகை
ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களாக கார்த்திகை,பூசம் மற்றும் விசாக நட்சத்திரங்கள் கருதப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கள் முருகன் கோயில்களில் விமரிசையாக
பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களாக கார்த்திகை,பூசம் மற்றும் விசாக நட்சத்திரங்கள் கருதப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்கள் முருகன் கோயில்களில் விமரிசையாக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை நட்சத்திரமானது ஆடிமாதத்தில் வரும் பொழுது இவ்விழா மேலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பழனியில் திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் மலர்க்காவடி எடுத்து ஆடிப்பாடி வந்தனர்.
மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பழனி அடிவாரம் வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம், முடிக்கொட்டகை மற்றும் மலைக்கோயில் கட்டண தரிசன வரிசைகளில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் நான்கு மணிநேரமானது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வழித்துணை என்ற பொருளில் நல்லாசிரியர் திருமலைசாமியும், அலங்கார அழகன் என்ற பொருளில் தேவியும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். தொடர்ந்து நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதப் பொருட்கள் வழங்கப்பட்டது. மலைக்கோயிலில் தங்கமயில், தங்கரத புறப்பாட்டைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கான குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, சுகாதார வசதிகள் திருக்கோயில் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.