நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில், காந்திமதி அம்மன் சன்னிதியில் ஆடிப்பூர திருநாள் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி முளைக்கட்டுத் திருநாள் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில், காந்திமதி அம்மன் சன்னிதியில் ஆடிப்பூர திருநாள் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.கடந்த 24 ஆம் தேதி நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களை படைத்து வழிபட்டனர். அன்று மாலையில் அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருவிழாவின் 10 ஆம் நாளான புதன்கிழமை இரவு காந்திமதியம்மன் சன்னிதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள் நடைபெற்றது. இதையொட்டி காந்திமதி அம்பாள் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு முளைக்கட்டு நிகழ்வுக்குப் பின்பு மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள் ஒரு வாரம் விரதமிருந்து நவதானியங்களை முளைப்பாரியாக எடுத்து வந்ததோடு, அம்மனுக்கு பட்சணங்களையும் படைத்து வழிபட்டனர். இதுதவிர வளைகாப்பு நிகழ்வுக்கு வர முடியாத பக்தர்கள் பலரும், இந்த நாளில் வளையல் மற்றும் மலர்மாலையை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.