நரிக்குறவர் சமூக மாணவர்கள் கல்வி பயில கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நடவடிக்கை
நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், சிதம்பரம் அரசினர் நந்தனார் பள்ளியில் கல்வி பயில மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டார்.
நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், சிதம்பரம் அரசினர் நந்தனார் பள்ளியில் கல்வி பயில மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டார்.
சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் கல்வி பயிலுவதில் போதிய நாட்டம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனை அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பாலூத்தங்கரையில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தில் கல்வி பயிலாமல் உள்ள மாணவர்களை, சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் நரிக்குறவ சமூகத்தினர், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ உத்தரவின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், பள்ளிப்படை கிளை செயலாளர் ஜோசப், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ராம்குமார் ஆகியோர் சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தி பாலூத்தங்கரையில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த் சக்திவேல், முருகேசன் ஆகிய மாணவர்கள் 8-ம் வகுப்பிலும், சந்துரு என்ற மாணவர் 6-ம் வகுப்பிலும், தமிழரசி என்ற மாணவி நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பிலும் அனுமதி சேர்க்கை செய்தனர். அன்றைய தினமே அம்மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் ஆகியவற்றை தலைமை ஆசிரியர் பால்ராஜ் வழங்கினார்.