பழனி அருகே மின்கம்பி உரசி தீ விபத்தில் கொய்யா கன்றுகள் நாசம்
பழநி அருகே ஆயக்குடியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின.
பழநி அருகே ஆயக்குடியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின.
பழநி பகுதியில் உள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. பழநி அருகே ஆயக்குடி கறிக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் கம்பத்துராஜா (30). இவருக்கு பொன்னிமலை கரடு பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கரில் தென்னை மற்றும் கொய்யா கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. இந்நிலையில் பருவமழை பொய்த்ததால் தோட்டத்தில் செடிகளின் இலைகள் காய்ந்து ஏராளமான சருகுகள் இருந்துள்ளன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தின் வழியாக தாழ்வாக சென்ற மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசி உள்ளன. இதில் ஏற்பட்ட தீப்பொறி, சருகுகளில் விழுந்துள்ளது.தீ மளமளவென பரவியதில் சுமார் 3 ஏக்கரில் இருந்த 1000 கொய்யா கன்றுகள் கருகி நாசமாயின. காய்ப்பு நிலையில் இருந்த கொய்யா கன்றுகள் கருகியதால் சுமார் 1.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கம்பத்துராஜா மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இவரது புகாரின் பேரில் ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.