பழனியில் வைகாசி விசாகத் திருவிழா திருத்தேரோட்டம்
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி தம்பதி சமேதராக தந்தப்பல்லக்கு, தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, கற்பகவிருஷம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். 6ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாலை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 7ம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு தம்பதி சமேதராக சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி தேரில் ஏற்றம் செய்யப்பட்டார். மாலை 4.30 மணிக்கு அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவில் தேரடியில் திருத்தேரோட்டம் துவங்கியது. தேரில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். தேர் நான்கு இரத வீதிகளில் ஆடி, அசைந்து வந்ததையும், தேரின் பின்னே பக்தர்களுக்கு உதவியாக கோவில் யானை கஸ்தூரி தேரை தள்ளியதும் காணக் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பி கைதட்டி மகிழ்ந்தனர். வரும் சனிக்கிழமையன்று திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருத்தேர் வடம்பிடித்தலில் இணை ஆணையர்(பொ) இராஜமாணிக்கம்,உதவி ஆணையர் மேனகா,ஆர்.டி.ஓ சுந்தரராஜ், டி.எஸ்.பி சண்முகசுந்தரம், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து, காணியாளர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.