விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்ச்சிகளின் மூலமும், தொடர் சிகிச்சை மருந்து மாத்திரைகள் வழங்குவதால் ஒவ்வொரு ஆண்டும் எச்.ஐ.வி பாதிக்கப்படுவோரின் சதவீதம் குறைந்து கொண்டே வருவதாக எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2001 முதல் 2014 வரையில் எச்.ஐ.வியால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 4964 பேர் ஆவார்கள். இதில், தொடர் சிகிச்சை மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை பெறுவதற்காக 3845 பேர் பதிவு செய்திருந்தனர். இம்மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனை, வட்டார தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இப்பணியை மேற்கொள்வதற்கு நம்பிக்கை மையம், கவுன்சிலர்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களும் உள்ளனர். இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல், எய்ட்ஸ் தொடர்பாக சுகாதாரத்துறை மூலம் பிராசார விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பேர்கள் வரையில் எச்.ஐ.வி பரிசோதனை அந்தந்த பகுதி சுகாதார நிலையங்கள் மூலம் நடத்தப்படுகிறது. கடந்த 2006-07 ல் பரிசோதனைக்கு வந்தவர்களில் 1.38 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, 2007-08ல் 0.95 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, 2008-09ல் 0.77 சதவீதம், 2009-10ல் 0.62 சதவீதம், 2010-11ல் 0.71 சதவீதமும், 2012-2013ல் 0.51 சதவீதமும், நிகழாண்டில் 0.43 சதவீதம் பேருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடையே அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் தான் எச்.ஐ.வி பாதிப்பின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருவதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.