முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் இரு அரசு பேருந்து ஜப்தி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து மோதியதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு வழங்காததால், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர்

Updated On : 19 ஜூன், 2014 at 7:01 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து மோதியதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீடு வழங்காததால், வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நீதிமன்ற உத்தரவுபடி இரு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் கீழூரைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் தேவி (19). பிளஸ் 2 முடித்துள்ள இவர், 31.8.07-ம் தேதி பெண் காவலர் தேர்வு எழுதச் செல்லும் முன் சாமி கும்பிடுவதற்காக எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கு அருகே சைக்கிளில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து தேவி மீது மோதியது.

இதில் பலத்த காயமுற்ற அவர், ராஜபாளையம் தனியார் மருத்துமவனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது இடது கால் எடுக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து தேவி சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் குணசேகரன் என்பவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தார்.

Advertisement

மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், 26.4.11-ம் தேதி, மதுரை அரசு போக்குவரத்துக்கழகம், தேவிக்கு ரூ.2.58 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்று தேவி சார்பில, மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கர்ணன் 18.10.12-ம் தேதி, ரூ.2.58 லட்சத்துடன் கூடுதலாக ரூ.3 லட்சம் சேர்த்து ரூ.5.58 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு தரவில்லை. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் தேவி சார்பில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.தேவதாஸ், 11.6.14-ம் தேதி, இழப்பீடு தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.8,22,821 வருகிறது.

இந்த இழப்பீட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்காததால், அரசு போக்குரத்துக்கழக இரு பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.இதனையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்த இரு அரசு போக்குவரத்குக் கழக பேருந்துகளை நீதிமன்ற கட்டளை நிறைவேற்றும் பணியாளர்கள் ஜப்தி செய்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.