ஒன்றரை ஆண்டுகளாக தோப்புகளை சேதப்படுத்தி வந்த யானை மின் வேலியில் சிக்கி சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு தோப்புகளை சேதப்படுத்தி வந்த ஒற்றை யானை தனியார் தோப்பில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு தோப்புகளை சேதப்படுத்தி வந்த ஒற்றை யானை தனியார் தோப்பில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்புற வனப் பகுதியை ஒட்டியுள்ள தனியார் மா, தென்னை தோப்புகளில் ஒற்றை யானை ஒன்று கடந்த ஒன்னறை ஆண்டுகளாக தொடர்ந்து சேதங்களை விளைவித்து வந்தது. இதனைப் பிடித்து வனத்திற்குள் அனுப்ப வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
தற்போது மாம்பழம் காய்க்கும் பருவம் ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களது தோப்புகளைப் பாதுகாக்க அமைத்துள்ள இரும்புக் கம்பி வேலியில் இரவு நேரங்களில் மின்சாரத்தை சட்ட விரோதமாக பாய்ச்சி வைத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மம்சாபுரம்-செண்பகத்தோப்பு சாலையில் மம்சாபுரம் கணபதியப்பன் (60) மற்றும் இவரது மகன் செல்வக்குமார் (40) ஆகியோருக்குச் சொந்தமான மாந்தோப்பிற்கு ஒற்றை யானை வந்துள்ளது. அப்போது சட்ட விரோதமாக இரும்பு வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி இந்த 6 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து அறிந்ததும் மாவட்ட வன உயிரின வனக் காப்பாளர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் தோட்டத்தின் உரிமையாளர்களான கணபதியப்பன் மற்றும் செல்வக்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர்.