காதல் திருமணம் செய்த மனைவியை சாதியைக் கூறி இழிவு படுத்தியதாக கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை சாதியைக் கூறிய இழிவுபடுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை சாதியைக் கூறிய இழிவுபடுத்தியதாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம்-திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (20). இவரும் வலையபட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் கூடலிங்கம் (22) என்பவரும் 20.2.13-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு திருமலாபுரத்தில் தனிக்குடித்தம் இருந்துள்ளனர். இதனால் சித்திரை மாதம் பாண்டியம்மாள் கர்ப்பம் திரித்துள்ளார். ஆவணி மாதம், கூடலிங்கம் தனது அக்காள் திருமணத்திற்கு பெற்றோர் அழைப்பதாகக் கூறிச் சென்றுள்ளார். இரு நாட்கள் கழித்து திரும்பி வந்த அவர், உன்னோடு சேர்ந்து வாழ இயலாது. சேர்ந்து வாழ்ந்தால் என் குடும்பத்திற்கு அவமானம் என்று கூறியதுடன் விவாகரத்து கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தினாராம். பின்னர் தனது அக்காவின் திருமணத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம்.
இதற்கிடையே 20.1.14-ம் தேதி பாண்டியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிள்ளையை பார்க்க வராததால், தனது பெற்றோருடன் பாண்டியம்மாள் கூடலிங்கம் வீட்டிற்குச் சென்று கேட்ட போது, கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் சாதியைக் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையின் இறுதியில், தனி வீடு பார்த்து பாண்டியம்மாளை அழைத்துச் செல்வதாக கூடலிங்கம் போலீஸில் கூறியுள்ளார். ஆனால் திரும்ப வரவே இல்லையாம்.
இதனையடுத்து பாண்டியம்மாள், தன்னை சாதியைக் கூறிய இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கூடலிங்கம் மற்றும் அவரது தாய் ராஜாத்தி (45) ஆகியோரைக் கைது செய்தனர். கூடலிங்கத்தின் தந்தை முத்தையாவை போலீஸார் தேடி வருகிறார்கள்.