முகப்பு
தற்போதைய செய்திகள்

சுமங்கலி திட்டத்திற்கு எதிரான கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் டெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் சுமங்கலி திட்டத்திற்கு எதிரான மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் டெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் சுமங்கலி திட்டத்திற்கு எதிரான மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

 திருப்பூர் மக்கள் அமைப்பின் சார்பில் பஞ்சாலை மற்றும் பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் இளம் பெண் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து டெஸ்ட் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஏ.ஜோசப்ராஜ் கருத்துரையாற்றினார்.  திருப்பூர் மக்கள் அமைப்பின் செயல்பாட்டாளர்களான சைகோ அறக்கட்டளை இயக்குநர் கிறிஸ்துராஜ், ரீடு அமைப்பின் இயக்குநர் பி.ராமதாஸ் ஆகியோர் வளரிளம் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் இழப்புகள் குறித்து விளக்கினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தி.ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் வெ.அழகிரிசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் எம்.அசோகன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.வி.சசிக்குமார் ஆகியோர் சுமங்கலித் திட்டம், பெண் பஞ்சாலைத் தொழிலாளர்களின் கூலி நிர்ணயம், சுமங்கலித் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடனான கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உடலுழைப்பில் பால் வேறுபாடு கூடாது. ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சமுதாயத்திலும், குடும்பத்திலும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளும் பாலியல் கொடுமைகளும் உடனே நிறுத்தப்படவேண்டும். வளரிளம் பெண்களுக்கு ஐ.நா.வின் மனித உரிமை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →