முகப்பு
தற்போதைய செய்திகள்

கிராம ஊராட்சிகளில் உள்ள கட்சி அடையாளங்கள் மறைக்கப்படுமா?

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில் கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள கட்சி அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் என நடுநிலையாளர்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில் கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் அவற்றிற்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள கட்சி அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் என நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி ஒன்றியகுழு,மாவட்ட ஊராட்சி குழு,கிராம ஊராட்சி என பல அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றன.இதில் கிராம ஊராட்சி தேர்தல் மட்டுமே கட்சி சார்பின்றி நடத்தப்படுகின்றன.கிராம ஊராட்சி தேர்தல்களில் தலைவர்,உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்களே தரப்படுகின்றன.அவர்களுக்கு கட்சி சின்னங்கள் அளிக்கப்படுவதில்லை.கிராம முன்னேற்றத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.அரசியல் கலப்பினால் கிராம மேம்பாடு தடைபடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நியாமான காரணங்களின் அடிப்படையில் பஞ்சாயத்துராஜ் சட்டப்படி கிராம ஊராட்சி தேர்தல் மட்டும் அரசியல் கட்சி சார்பின்றி நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இப்படி ஒரு முறை உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைக்கும் வகயில் சில செயல்பாடுகள் பல ஆண்டுகளாக தொடர்கின்றன என்பதும் உண்மை.தற்போது தமிழகத்தில் உள்ள பல ஊராட்சி அலுவலகங்களில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்களின் வாயலில் ஊராட்சி தலைவர்,துணைத்தலைவர்,சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் பெயர்கள் பெரிய எழுத்துக்களில் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளன.மேலும் ஊராட்சிக்குள்பட்ட பேருந்து நிறுத்த கட்டிடங்கள்,எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லைப் பலகைகள் உள்ளிட்ட பல கட்டிடங்களில் இவ்வாறே கட்சி நிறங்களில் எழுதப்பட்டுள்ளன.சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டு வெற்றிபெறும் கிராம ஊராட்சி தலைவர்கள்,உறுப்பினர்கள் பொறுப்பேற்றவுடன் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி அடையாளங்களை பொது கட்டிடங்களில் வெளிப்படுத்த தொடங்கி விடுகின்றனர்.இதறகு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.

Advertisement

ஏற்கனவே உள்ள சட்டப்படி அரசுக்கு சொந்தமான பொது கட்டிடங்களில் கட்சி சார்ந்த வண்ணங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை எழுதுவதற்கு அனுமதி இல்லை.இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வரின் படங்களே கழட்டப்பட்டுள்ளன.கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.ஆனால் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பொது கட்டிடங்களில் கட்சி சார்ந்த வண்ணங்களில் எழுதப்பட்டுள்ள பெயர்கள் தினமும் அனைவரது பார்வையில் பட்டும் அது கவனம் பெறாமலேயே உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி தற்போது கட்சி சார்ந்த அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதோடு இனி எப்போதுமே ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பொது கட்டிடங்களில் கட்சி சார்புள்ள அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பது சட்டப்படி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments