திருக்கடையூர் கோவிலில் புதையுண்டிருந்த செப்பு தகடுகள்,நாணயங்கள் கண்டெடுப்பு
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கட்டுமானப் பணியின்போது புதையுண்டிருந்த செப்பு தகடுகள்,செப்பு நாணயங்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கட்டுமானப் பணியின்போது புதையுண்டிருந்த செப்பு தகடுகள்,செப்பு நாணயங்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி உடனுறை அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் மண்டபம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் புதன்கிழமை கட்டுமானப் பணிக்காக குழி தோண்டியபோது உடைந்த நிலையில் பெரிய மட்பாண்டமும் அதனுள் சில பொருள்களும் இருப்பது தெரிய வந்தது.
அப்பொருள்களை வெளியில் எடுத்து பார்த்தபோது 15 செ.மீ நீல அகலத்தில் சதுர வடிவிலான செப்பு தகடுகள் அதிக அளவில் இருந்தன.இவற்றின் மொத்த எடை அளவு சுமார் 90 கிலோ என அளவிடப்பட்டது.மேலும் 65 செப்பு நாணயங்கள்,சிதிலமடைந்த நிலையில் செம்பினாலான கவசம்,ஆணிகள் உள்ளிட்ட பூஜைக்கான சில பொருளகளும் இருந்தன.
Advertisement
கோவில் பிரகார சுவற்றிலிருந்து 3 அடி தூரத்தில் நான்கரை அடி ஆழத்தில் இப்பொருள்கள் புதையுண்டிருந்தன.
கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.அவற்றை தரங்கம்பாடி வட்டாட்சியர் த.அழகர்சாமி,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் டி.தங்கதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.உரிய ஆய்வுக்குப் பின்னரே இது குறித்த விபரங்களை அறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.செப்புத் தகடுகளில் எழுத்துக்கள் எதுவும் பொறிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.ஐம்பொன் சிலை செய்வதற்கான தாது பொருளாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது.நாணயங்களில் எழுத்துக்கள் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.