நாய்கள் கடித்து 2 மான்கள் சாவு
திருவண்ணாமலையை அடுத்த கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அதிகாலை 6 மணிக்கு 2 மான்கள் தண்ணீர் தேடி இனாம்காரியந்தல், பொசவன்குட்டை பகுதிக்கு
திருவண்ணாமலை அருகே நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த 2 மான்கள் இறந்தன. கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மற்றொரு மான், காட்டில் விடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அதிகாலை 6 மணிக்கு 2 மான்கள் தண்ணீர் தேடி இனாம்காரியந்தல், பொசவன்குட்டை பகுதிக்கு வந்துள்ளன. இதைக் கவனித்த தெரு நாய்கள் மான்களை துரத்திக் கடித்துள்ளன. இதில் படுகாயமடைந்த ஒரு மான் நிலத்தில் விழுந்து துடிதுடித்து இறந்தது. மற்றொரு மான் அங்குள்ள ராமு என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த மானை மீட்க பொதுமக்கள் முயன்றனர். அப்போது, அந்தக் கிணற்றில் ஏற்கெனவே ஒரு மான் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. கிணற்றில் இறந்து கிடந்த மானின் உடலிலும் நாய் கடித்த தடயங்கள் இருந்தன.
தகவலறிந்த வனத்துறையினர் வந்து கிணற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மானை மீட்டு காட்டில் விட்டனர். இறந்த 2 மான்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.