முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் புதைக்கப்பட்ட புதுமுக நடிகரின் உடல் தோண்டி எடுப்பு

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (37). கணினி மையம் நடத்தி வந்த இவர் பின்னர் இணையதளத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

சென்னையில் கொலை செய்யப்பட்டு நெல்லையில் புதைக்கப்பட்ட புதுமுக நடிகரின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ (37). கணினி மையம் நடத்தி வந்த இவர் பின்னர் இணையதளத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். திரைப்படங்கள் எடுக்க கடன் வழங்கி வந்த ரொனால்ட்பீட்டர் பிரின்சோ, காகிதபுரம் என்ற படத்தில் நடித்தாராம்.

மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பிரின்சோவுக்கும், சாம்பவி திரைப்படத்தில் நடித்த துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். பின்னர் அவர்கள் தம்பதிகள் போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரின்சோவுக்கும், அவரது நண்பரான நெல்லையைச் சேர்ந்த உமாசந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதன்பின்பு உமாசந்திரன், துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி சென்னையில் வைத்து பிரின்சோவை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவரது கார் ஓட்டுநரான பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஜான்பிரின்சன் உதவியாக இருந்தாராம். பிரின்சோவின் உடலை, திருநெல்வேலிக்கு கொண்டு வந்தனர். பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரத்தில் புதைத்துள்ளனர். இதற்கு உமாசந்திரனின் நண்பர்களான பாளையங்கோட்டையை சேர்ந்த ரபீக்உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் உதவியதாகக் கூறப்படுகிறது.

பிரின்சோவின் சகோதரர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து ரபீக்உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.இவ் வழக்கில் தொடர்புடைய துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, உமாசந்திரன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உடல் தோண்டி எடுப்பு:

பாளையங்கோட்டை வட்டாட்சியர் சொர்ணம் கோமதிநாயகம், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர் ஆகியோர் முன்னிலையில், பிரின்சோவின் உடல்  திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் செல்வமுருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்தனர். இதனால் அப் பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. பிரின்சோவின் எலும்புகள் அனைத்தும் டி.என்.ஏ. உள்ளிட்ட பரிசோதனைக்களுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடல்பாகங்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ் வழக்கில் நடிகை ஸ்ருதிசந்திரலேகா உள்ளிட்டோரை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிடிபட்ட பின்னர்தான் வழக்கின் உண்மை நிலைகள் முழுமையாக தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →