குடிநீர் பிரச்னை: காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மாசுகலந்த குடிநீர் விநியோகம், குடிநீர் தட்டுபாடு பிரச்னையை தீர்க்க வேண்டு்ம் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாசுகலந்த குடிநீர் விநியோகம், குடிநீர் தட்டுபாடு பிரச்னையை தீர்க்க வேண்டு்ம் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை ஒன்றியம், ராமையன்பட்டி ஊராட்சியில் 4 ஆவது வார்டு வேப்பன்குளம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதால் வேப்பன்குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் கிடைப்பதில்லை.
மேலும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து நிறம் மாறி காணப்படுகிறது. இந்த குடிநீரை பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 10 தினங்களாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள பால்கட்டளை, சிதம்பரம்நகர், ராமையன்பட்டிக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என புகார் தெரிவித்து
வேப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.