வாக்கு எண்ணும் மையங்களில் இணைய தள வசதி: ஆட்சியர்
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தலைமை தேர்தல் ஆணையருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் இணையதள வசதி
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தலைமை தேர்தல் ஆணையருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதன்கிழமை வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் கூறியதாவது:
திருநெல்வேலி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான மேஜைகள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவும், வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் இணைய தள வசதி செய்யப்பட்டு்ள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை முகவர்களுக்கு தெரிவிக்க வசதியாக நகல் எடுக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் அறைகள் மற்றும் செய்தியாளர்களின் அறைகளில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.