பட்டுக்கோட்டையில் நிலத்தரகர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த நிலத்தரகர் பி. கோவிந்தராஜ் (56). இவரிடம் கண்டியன் தெருவைச் சேர்ந்த எஸ். கலைச்செல்வன் மன்னை நகர் பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான
பட்டுக்கோட்டையில் நிலத்தரகர் சனிக்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த நிலத்தரகர் பி. கோவிந்தராஜ் (56). இவரிடம் கண்டியன் தெருவைச் சேர்ந்த எஸ். கலைச்செல்வன் மன்னை நகர் பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத் தரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவரது நிலத்தை விற்க கோவிந்தராஜ் தீவிர முயற்சி மேற்கொண்டார்.
இதற்கிடையே, மன்னை நகர் அய்யர் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஏ. நாடிமுத்து (42) என்பவர் அண்மையில் கலைச்செல்வனிடம் பணம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பித் தராமல் இழுக்கடித்ததால் கடன் தொகைக்குப் பதிலாக நாடிமுத்துவுக்கு சொந்தமான நிலத்தை அவரிடம் கலைச்செல்வன் தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த நாடிமுத்து நிலத்தரகர் கோவிந்தராஜிடம் சென்று கலைச்செல்வன் நிலத்தை விற்றுத் தர முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு கோவிந்தராஜ் மறுத்து விட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மன்னை நகர் பகுதியில் கலைச்செல்வனுடன் சென்ற கோவிந்தராஜை நாடிமுத்து, அவர் நண்பர் எம். பக்கிரிசாமி (30) ஆகிய இருவரும் வழி மறித்து கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் அதேயிடத்தில் உயிரிழந்தார்.இது தொடர்பாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப் பதிந்து நாடிமுத்து, பக்கிரிசாமி இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.