மாநில அளவில் முதலிடம் பெற்ற மூக்குப் பொடி வியாபாரியின் மகள்
தமிழக அளவில் 10-ம் வகுப்பு தேர்வில் மூக்குப்பொடி வியாபாரியின் மகள் ஆர். ஸ்ரீரத்தினமணி முதலிடம் பெற்றுள்ளார். அதோடு சிறந்த விஞ்ஞானியாகி நாட்டுக்கு சேவை செய்வதே லட்சியம் எனவும் தெரிவித்தார்.
தமிழக அளவில் 10-ம் வகுப்பு தேர்வில் மூக்குப்பொடி வியாபாரியின் மகள் ஆர். ஸ்ரீரத்தினமணி முதலிடம் பெற்றுள்ளார். அதோடு சிறந்த விஞ்ஞானியாகி நாட்டுக்கு சேவை செய்வதே லட்சியம் எனவும் தெரிவித்தார்.
விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத் தெருவைச் சேர்ந்த ஆர்.ராம்தாஸ்-நாகராணி தம்பதியரின் மகள் ஸ்ரீரத்தினமணி(17). இவரது தந்தை வெயிலுகந்தம்மன் வீதியில் மூக்கு பொடி வியாபாரம் செய்து வருகிறார். அதேபோல், தாயார் அரசு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவியாவர். இந்நிலையில் இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-100, கணக்கு-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மாணவி ஸ்ரீரத்தினமணி கூறியதாவது: ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றைய நாளிலேயே படித்து விடுவேன். பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் கூச்சப்படாமல் கேட்டு அறிந்து கொள்வேன். அதனால் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவியாக இருந்து வருகிறேன். அதேபோல், ஒவ்வொரு திருப்புதல் தேர்வுகளையும் பொதுத்தேர்வாக நினைத்து எழுதுவேன். அதனால் பொதுத்தேர்வை என்னால் எளிதாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளேன். நான் விஞ்ஞானியாகி நாட்டுக்கு சேவை செய்வதே என் லட்சியமாகும் என மாணவி தெரிவித்தார்.
Advertisement