பழனியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
பழனியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமார் மூன்றரை மணி நேரம் மழை பெய்தது.பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து பல பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டது.இந்த மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டத்துக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் பூமி குளிர்ந்து குளுமையான சூழல் நிலவியது. கனமழையின் காரணமாக சுமார் 1.30 மணி நேரம் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.
பழநியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளில் உள்ள பிரிட்ஜ், டிவி, மிக்சி போன்ற மின்னனு சாதனங்கள் பழுதடைந்தன. வெயிலில் உலர்த்துவதற்காக உலர் களங்களில் வைக்கப்பட்டிருந்த பயிர்வகைகள் நனைந்து நாசமாயின.இடி விழுந்ததால் பழநி, தட்டான் குளத்தைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது வீட்டின் முன்பிருந்த தென்னை மரம் தீப்பிடித்தது.
அதுபோல் இடி விழுந்ததில் பழநி அருகே நரிக்கல்பட்டியில் உள்ள பழனிச்சாமி என்பவரது டீக்கடையில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புப்படையினர் நிலைய அலுவலர் மயில்ராஜு தலைமையில் சம்பவ இடங்களுக்கு விரைந்து தீயை அணைத்தனர் மேலும், இந்த மழை விவசாயப்பணிகளுக்கு போதாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பழனியில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஒடியது. பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களும் திடீர் மழையில் சி்க்கி பெரும் அவதிக்குள்ளாகினர்.