முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:23 AM
பகிர்:

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகரில் காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து, ஜி.கே.வாசன் அணியில் இணைந்து, அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்

சிதம்பரம் தெற்குவீதியில் உள்ள ஹோட்டல் மானஸரோவரில் திருச்சியில் நவ.28-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகர காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்துவிட்டு ஜி.கே.வாசன் அணியில் அனைவரும் இணைந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசியது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் ஜி.கே.வாசன் அணியில்தான் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள ஒட்டு மொத்த தலைவர்களும் வாசன் அணியில்தான் உள்ளனர். தொண்டர்களை நோக்கி வாசனின் பயணம் தொடங்கியுள்ளது. அவரது கரத்தை நாங்கள் வலுப்படுத்துவோம் என ஏ.எஸ்.வேல்முருகன் தெரிவித்தார். மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றுப் பேசினார். அவர் பேசியது: சிதம்பரம் நகர காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டு, ஜி.கே.வாசன் பின்னால் உள்ளது.

Advertisement

அகில இந்திய அளவில் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைத்து விட்டார். எனவே இளைஞரான ஜி.கே.வாசன் தனிக்கட்சியை தொடங்கி தமிழக அரசியல் வரலாற்றில் மாற்று சக்தியாக திகழ்வார் என ஆர்.மக்கீன் தெரிவித்தார். மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, ஜி.கே.வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், ராஜா சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.கே.வாசன் அணி மேலிட பார்வையாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாநில சேவாதள காங்கிரஸ் கூடுதல் அமைப்பாளராக இருந்த கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் பாபுசந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், ஆர்.சம்பந்தமூர்த்தி, துரை.சிங்காரவேலு, சின்ராஜ், நகரமன்ற உறுப்பினர் முகமதுஜியாவுதீன், வல்லம்படுகை கணேசன், இரும்பு ஆறுமுகம், மாணவரணி மாவட்டத் தலைவர் மணிகண்டன், மகளிரணி ராஜலட்சுமி, ஜெனகம், மீனாசெல்வம், தில்லைசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments