தூத்துக்குடியில் வியாபாரிகள் மறியல்- கடையடைப்பு
தூத்துக்குடி சிவன் கோயிலைச் சுற்றியுள்ள சாலையில் மூன்று இடங்களில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை
தூத்துக்குடி சிவன் கோயிலைச் சுற்றியுள்ள சாலையில் மூன்று இடங்களில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீரென மறியலிóல் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக கோயில் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற அருள்மிகு சங்கரராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். பண்டிகை காலங்களில் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதைனைக் கருத்தில் கொண்டு கோயில் முன்புள்ள சாலைகளில் மூன்று இடங்களில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல் துறை மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறிய அந்தப் பகுதி வியாபாரிகள் இரும்புக் கதவை அகற்ற மாநகரக் காவல் துறை முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், இரும்புக் கதவு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, திடீரென டபுள்யூஜிசி சாலையில் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் திரண்ட வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸôர் போக்குவரத்து நெரிசல் ஏர்படாமல் இருக்கும் வகையில் மாற்று வழியில் வாகனங்களை திருப்பிவிட்டனர்.
இதையடுத்து, மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரேணியஸ் ஜேசுபாதம், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரும்புக் கதவை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என வியாபாரிகள் தெரிவித்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர், போராட்டத்தை கைவிட்டுச் சென்ற வியாபாரிகள் தனியார் திருமண மண்டபத்தில் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனக் கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்ட வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் சோலையப்ப ராஜா, செயலர் ஞானசெல்வன், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு செய்வதாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.