அகில இந்திய காங். பொதுச்செயலாளராக நாராயணசாமி நியமனம்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக மத்திய முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால் தேர்தல் முடிந்து 4 மாதமாகியும் புதிதாக எந்த நிர்வாகியும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
அப்போது நாராயணசாமியை வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமித்துள்ளதாகவும், அந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டுவரவும், கட்சியை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி சோனியாகாந்தி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நாராய ணசாமி சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்தார்.
அகில இந்திய பொதுச்செயலாளராக நாராயணசாமி நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் அருணாச்சல பிரதேசம், மிஜோராம், மணிப்பூர், மகாலயா, திரிபுரா, நாகாலந்து, சிக்கிம் ஆகிய 7 மாநிலங்கள் உள்ளது. இதில் 4 மா நிலங்களில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலங்களின் பொறுப்பு பொதுச்செயலாளராக ஏற்கனவே நாராயணசாமி செயல்பட்டவர்.
அப்போது 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உறுதுணையாகவும் இருந்துள்ளார். அதோடு மட்டுமின்றி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வடகிழக்கு மாநிலங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவிலும் நாராயணசாமி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 20ம் தேதி பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் நாராயணசாமி வடகிழக்கு மாநில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை துவக்கவுள்ளார்.